கீழ்க்கண்ட மாதிரி மனிதர்களை நம்பக் கூடாது:

• சாமர்த்தியமாகப் பொய் பேசுபவர்களை.

• அவர் பேசியது பொய் என்று நீங்கள் நிரூபித்தாலும் தான் சொன்ன பொய்யை மறைக்க வேறொரு பொய் சொல்பவர்களை.

• உங்கள் பணம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்துக்காக (மட்டும்) உங்களைக் கொண்டாடுபவர்களை, மிகையாக உங்களுக்கு மரியாதை காண்பிப்பவர்களை.

• உங்களைப் பற்றி ஆழமாக ஒன்றும் தெரியாமலேயே உங்களுக்கு முகத்துதி செய்பவர்களை

• கடன், கைமாற்று வாங்கினால் திருப்பிக்கொடுக்காதவர்களை; ஒரு வேளை நீங்கள் நினைவுருத்திக் கேட்டால் ஏதோ கேட்பது உங்கள் தவறு போலவும், அவரது நேர்மையையை நீங்கள் சந்தேகிப்பவர் போலவும் எதிர் உணர்ச்சியை வெளிப்படுத்துபவர்களை

• அளவுக்கு அதிகமாக வாயோயாமல் பேசுபவர்களை

• பேச்சு, உடல் அசைவுகள், முக பாவம் இவற்றில் செயற்கைத் தனம் அல்லது மிகை (பரத நாட்டியக் கலைஞர் வெளிப்படுத்தும் அதிகப் படி பாவங்களைப் போல!)

• தன் தகுதி, திறமை, புத்திசாலித்தனம் போன்றவற்றில் அதிக உயர்வு நவிற்சியையும், தற்பெருமையையும் வெளிக்காட்டுபவர்களை

• அவருடன் சேர்ந்து போகும்போது உணவகத்தில் பணம் கொடுக்கையில், பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கையில்/ ஆட்டோவிற்குப் பணம் கொடுக்கையில், சினிமாவுக்கு டிக்கெட் எடுக்கையில் -- இப்படியெல்லாம் பணம் செலவழிக்க வேண்டி வரும்போது மிகப் பெரும்பாலும் நீங்களே அதைச் செய்யும் விதத்தில் நடந்துகொள்பவரை

• உங்கள் தொழிலுக்கோ, சேவைக்கோ அவர் வாடிக்கையாளராக இருந்து, உங்களுக்கு அவர் தரவேண்டிய பணத்தில், உங்கள் பக்கத்திலிருந்து யாதொரு பிழையும் இல்லாதிருந்தும் உங்களுக்கு வரவேண்டிய தொகையை முழுவதும் தராமல் சாக்கு போக்கு சொல்பவரை

• ஒரு வாடிக்கையாளராக, உங்களுக்கு அவர் தரும் பெரும் பணி ஒன்றை வெறும் வாய்வழியாக மட்டுமே தர முயல்வதும், எழுத்து வழி தருவதற்கு சாக்குப்போக்கு சொல்வதுமாக நடந்துகொள்பவரை

• தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமானால் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களைக் கைப்பேசியில் அழைக்கத் தயங்காதவர்; அவரிடம் உங்களுக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமானால், கைப்பேசி அழைப்புக்ளை எடுக்காதவர், தாமாகவே மீண்டும் உங்களை அழைக்காதவர், அல்லது நேரம் கெட்ட நேரத்தில் (நீங்கள் அச்சமயத்தில் எடுக்க மாட்டீர்கள் என்று தெரிந்தும்) உங்கள் முந்தைய அழைப்புக்கு மறு அழைப்பு தந்து, மணி அடிக்கத் தொடங்கியவுடன் கட் செய்பவரை !