தனக்கானத் துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம் தான் அடிப்படை. ஆனால், ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்து விடாது.

எனவே திறமையில் சறுக்கல்கள் வரும் போது ஆர்வத்துக்குச் சற்றே அணை போட்டு விட வேண்டும்.

திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக் கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அதைப் முதன்மைத் துறையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆர்வம் அதிகமாக உள்ளதை இழந்து விடாமல், பொழுது போக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக் கொள்ளலாம்.

ஆர்வம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே தங்களது திறமையைக் கண்டு கொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.

ஒரு சிங்கம் ஒன்று ஒரு காட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.. அதற்கு ஒரு ஆசை. தன் காட்டில் வாழ்கின்ற மிருகங்களில் எதற்கு அதிக திறமை இருக்கிறது என்று சோதிக்கப் பார்க்க விரும்பியது.

அன்று மாலை காட்டில் உள்ள எல்லா மிருகங்களை அழைத்து தான் நடத்தப் போகும் சோதனையை விளக்கி, நாளைக் காலையில் எல்லா மிருகங்களும் என் கூட்டுக்கு வர வேண்டும் என்று சொல்லியது.

அன்றிரவு மிருகங்கள் யார் அந்தத் திறமைசாலி என்று குழம்பிக் கொண்டே உறங்கச் சென்றது.. காலையில் சிங்கம் நம் திறமையை எப்படி சோதனை செய்யப் போகிறதோ? என்ற கவலையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தின் இருப்பிடத்துக்கு வந்தன.கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம் அங்கு கூடி இருந்த மிருகங்களை பார்த்து,

"அதோ தொலைவில் தெரிகிறதே, அந்தப் பனை மரத்தின் உச்சிக்கு யார் முதலில் சென்று வருகிறீர்களோ, அவரே சிறந்த திறமைசாலி என்றது.

திகைத்துப் போன மிருகங்கள் மரத்தை நோக்கி ஓடிச் சென்றது. அதில் ஏறத் தொடங்கின. முதலில் மரத்தின் உச்சியை அணில் தொட்டது.

மற்ற எவற்றாலும் பாதி உயரம் கூட ஏற முடியவில்லை. வெற்றி பெற்ற அணிலோடு காட்டின் தலைவனான தான் போட்டி இடப்போவதாக அறிவித்தது சிங்கம்.

ஆனால் அந்த சிங்கத்தால் மரத்தில் ஏற முடியாமல் தோல்வியை தழுவியது.

குழம்பிப் போன சிங்கம் ஒவ்வொரு மிருகத்திடமும் அதனதன் திறமையைக் கேட்டு அறிந்தது. சிறுத்தை நன்றாக ஓடுவேன் என்றது. குரங்கு மரம் விட்டு மரம் தாவுவேன் என்றது. யானை நான் அதிக எடையை சுமப்பேன் என்றது

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு என்பதை அறிந்து கொண்டது சிங்கம். திறமையை சோதிக்க அனைவருக்கும் ஒரே மாதிரி போட்டி வைத்த தனது மடமையை எண்ணி வருந்திய சிங்கம்,பின்னர் தெளிவு அடைந்தது.

ஆம்.,நண்பர்களே..,

ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்று தான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக் கொள்வது தான் சிறந்தது.

ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்து விடும்.