எல்லாமே மாயை..
இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.பதவி,பட்டம், அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான்.

இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும்.

நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம்.

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்..

சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான்.

சாவி கொடுத்தால் குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும்..

ஒரு காவல்காரன். வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் ”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்…
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று….

அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம் உள்ளவன். இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு ''ஜாக்கிரதை,ஜாக்கிரதை'' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையை செய்தான்…
அடுத்த நாள் ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்தப் பையனைப் பார்க்கத் தான் வந்தான்.

”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்….

ஆனால் ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?.

முதல் நாள் இரவு பையன், ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக் கொண்டு போகவில்லை..

சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவை தான்……

அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை..

இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை….

ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா . உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவர்கள்.

விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே.. உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள்,
ஜாக்கிரதை ஜாக்கிரதை…

மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள்,
இளமை, வாலிபம் நிரந்தரமல்ல..

நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை,

இதில் நீ என்ன? நான் என்ன?, எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை,.

ஆம்.,தோழர்களே..

"உங்கள் புகழை, உங்கள் பதவியை,
அதிகாரத்தை
ஒரு போதும் நம்பாதீர்கள்"
இது எதுவுமே நிரந்தரம் கிடையாது".

ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...